Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Tuesday, February 4, 2020

முருகா என்றால்

முருகா! முருகா!! என்று விடாது சொல்லி சொல்லி ஞானம்தனை அவனிடத்து வரமாய் பெறுங்கள்.

முருகா என்றால் :

வேதாகமங்களெல்லாம் ஓங்கி உயர்ந்து போற்றுகின்ற வேதநாயகன் பரப்பிரம்ம சொரூபியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் முருகப்பெருமானே என்பதை உணரலாம்.

வேதங்களும், ஆகமங்களும், இதிகாசமும், புராணமும், ஞானநூல்களும், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும், தோத்திரங்களும், பிரபந்தங்களும் இன்னும் பலபலவாய் தோன்றிய வேதாகம நூல்கள் அனைத்தும் அந்த மறைபொருளாய் கால பரியந்தம் தனிலே வெளிப்படுத்தாது மறைக்கப்பட்ட ஆதி ஞானத்தலைவன் அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நாமங்களினாலே சொல்லி அழைக்கப்பட்ட நாமங்களின் நாயகன் முருகனே என்றும் அவனே ஞானமளிப்போன் அவனே அனைத்து நாமத்திற்கும் அழைத்த அக்கணமே வந்தருள் செய்து அன்பர் குறை தீர்த்திட்டவனும் எங்கெங்கிருந்து ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருளுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராயும் திகழ்ந்தனன் ஆதிமூல நாயகனாம் வேற்படை வேலவனாம் முருகப்பெருமானே என்றும் அறியலாம்.

ஆதலின் மனித மல அறிவின் துணை கொண்டு ஞானிகள் இயற்றிய ஞானநூல்களின் சாரங்களை நமது அறிவினால் உணர முடியாது என்றும், உணர்ந்து அந்த நூல்களில் அந்தந்த ஞானிகள் பின்வரும் திருக்கூட்ட மரபினர் அவர் சார்ந்த துறையின் தன்மையை தெரிந்து கொள்ளவே அவரவர் அனுபவத்தை ஞானானுபவத்தை எழுதி வைத்தனர் என்றும், அந்த அனுபவங்களை உணர்வால்தான் உணரமுடியுமே அன்றி வார்த்தைகளால் உணர முடியாது என்றும் அவர்கள் கண்டு இரசித்த பேரானந்த அனுபவத்தை ஞானநிலை கொண்டே நாமும் அனுபவிக்க முடியும் என்றும் உணர்ந்து ஞானமடைய ஞானிகள் திருவடியே துணையென்றும் ஞானிகள் திருவடி பற்றினாலன்றி ஞானபண்டிதனை அடைதல் இயலாது என்பதையும் உணரப்பெறுவார்கள்.

முருகா! முருகா!! முருகா!!! என்றே செபித்திட செபித்திட முருகன் அருள் கூடி அனைத்து தெய்வங்களின் பெயரினாலும் அழைத்திட்டாலும் அங்கே முன்னின்று அவரவர் விரும்பிய வடிவினிலே அருளுபவன் முருகன் தான் என்றும் அவரவர் செய்திட்ட பாவபுண்ணியத்திற்கு ஏற்பவே அவரவர் வழிபாடு இருக்கும் என்றும் அவரவரும் வினைக்கேற்ப அவர்தம் உள்ளத்து தோன்றும் சிந்தனைகள் மாறி சிலர் சிறுதெய்வ வழிபாட்டிலும், சிலர் பலியிடும் தெய்வங்களையும், சிலர் மும்மூர்த்திகளையும், சிலர் சக்தி வழிபாட்டிலும், சிலர் காளி மாரியம்மன் போன்ற தேவதைகளையும் சிலர் பல மதம் சார்ந்தும் வணங்கிடுவர் என்றும் முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி அருள்பலம் பெற்றவர் தமக்கு அருள்சோதி வடிவினனாக தோன்றி அருள்கின்றவன் அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனாக தோன்றி அருளி காக்கின்ற அந்த முருகனே அவரவர் வினைக்கேற்ப பன்றியாகவும், நாயாகவும், எருமையாகவும், காளியாகவும் இன்னும் பலபல வடிவினில் சிங்கமாகவும், புலியாகவும், அவரவர் பக்திக்கும் பாவவினைக்கேற்பவும் காட்சி தருகிறான்.

ஆயினும் அவனது பக்தி உண்மையாய் இருப்பின் அங்கிருந்தும் பெருந்தாயன்பினால் அவன் விரும்பிய வண்ணமே அருளுகின்றனர் முருகன்.

அற்புதமாய் ஆனந்த தரிசனம் பெற்று உயர்ஞானம்தனை பரிசாக பெற்று உயர்வடையக் கூடிய வகையிலே அழகுடை அதியற்புத சோதி வடிவினனாக தோன்றும் ஆறுமுகனை ஞானிகள் துணையிருந்தாலன்றி புண்ணிய பலம் இருந்தாலன்றி, குருவழிகாட்டல் இருந்தாலன்றி, ஞானமார்க்கம் வருகையுற்றால் அன்றி, அன்னதானம் செய்து பிறஉயிர் துன்பம் நீக்கினாலன்றி, சுத்த சைவம் கடைப்பிடித்தாலன்றி பெற இயலாது என்பது சத்தியம் என்பதையும் உணரலாம்.

சோதி வடிவுடை முருக தரிசனம் பாவவிமோசனம்!

குறையுடைய சிறு தெய்வ தரிசனம் பாவபெருக்கம்!

என்பதையும் முருகன் அருளால் உணரப்பெறுவார்கள்.

ஆக பன்முகம் காட்டும் முருகனை புண்ணிய பலத்தினால், அருள்பலத்தால் முற்றுப்பெற்ற ஞானிகள் உதவியுடன் முருகனை முருகனாக பார்க்க முடியாமல் போனது அவரவர் செய்திட்ட பாவமே என்றும் முருகனை பலவித கோர வடிவினனாக பார்த்து அவனது உண்மை சொரூபம் தனை அறிய ஒட்டாது தடுத்தது நாம் செய்த பாவமே என்றும் உணர்ந்து உண்மை ஞானசொரூப ஞானபண்டித முருகனை தரிசித்திட அயராது நாத்தழும்பேற முருகநாமத்தை சொல்லி சொல்லி பாவம் கழிந்து முருகதரிசனம் பெற வேண்டும் என்ற முயற்சியும் நம்முள் தோன்றும். தோன்றிய அம்முயற்சி முருகனருளால் முருகதரிசனம் கிடைத்திட துணை வரும்.

முருகா! முருகா!! என்று விடாது சொல்லி சொல்லி முருகனை நெஞ்சார நினையுங்கள்.

முருகனை முருகனாக பார்த்து மகிழ்ந்து ஞானம்தனை அவனிடத்து வரமாய் பெறுங்கள்.

No comments:

Post a Comment